Thursday, March 10, 2011

குடும்ப அரசியல் சரியா?

குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு தமிழகத்திலும், டெல்லி அரசியலிலும் அதிகரித்து வருகிறது. தந்தை பெரியார் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள் என்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்றுப் போராடினர். ரசியப் புரட்சியில் குழந்தை குட்டிகளுடன் அனைவரும் போர்க்களத்தில் குதித்தனர். சீனாவைப் புரட்டிப்போட்ட எழுச்சியில் அனைத்துக் குடும்பங்களும் பங்கேற்றன.

குடும்பம் குடும்பமாக அனைவரும் பங்கேற்காத எந்தப் போராட்டத்தின் வெற்றியையும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. எந்தத் தலைவனும் நினைத்துப் பார்த்ததில்லை. அண்மையில் வெடித்த எகிப்து கிளர்ச்சியிலும்கூட இப்படித்தான் அனைவரும் பங்கேற்றனர்.

இப்படி எல்லாம் குடும்பமாக பங்கேற்க சொல்லிவிட்டு, தம்முடைய குடும்பத்தை மட்டும் எதிர்க்கிறார்களே நியாயமா என முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அங்கலாய்க்கிறார். உண்மைதானே பிறகு எதற்கு இந்த எதிர்ப்பு...

அரசியல், ஊடகத்தொழில், திரைப்படத்தொழில் இப்படி பல்வேறு தொழில்களில் மு.கருணாநிதியின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளனர். எந்தத் தொலைக்காட்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், “சுமங்கலி” நிறுவனத்தின் ஆசி வேண்டும். திரையரங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சன் பிக்சர்ஸ், கிளவுட் நயன்ஸ், ரெட் ஜெயன்ட்ஸ்... போன்ற நிறுவனங்களின் அருளாசி இருந்தால்தான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியும். தி.மு.க. கட்சியில் முன்னேற ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, செல்வி, ராசாத்தியம்மாள் இப்படி யாராவது ஒருவரின் அங்கீகாரம்(?)வேண்டும்.

கிராணைட், ரியல் எஸ்டேட் என எந்தத்தொழிலும் கால் பதிக்க, முன்னேற இவர்களின் ஆசீர்வாதம் அவசியம் இருந்தாகவேண்டும். இந்த நிலைமைதான் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அரசியல், ஊடகம், திரைப்படத்துறை என எந்தத்தொழிலிலும் அனைவரும் ஈடுபடலாம்... திறந்தபோட்டி, சுதந்திர வாய்ப்பு என 1947 ஆகஸ்ட் 15 பெற்றுத்தந்த இந்த உரிமைதான் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் முடக்கப்படுகிறது. அதுவும் ஒரே ஒரு குடும்பத்திற்காக இவை அனைத்தும் முடக்கப்படுகிறது.

தி.மு.க. கழகமே குடும்பம் என அண்ணாத்துரை அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் குடும்பமே கழகம் என அதனை மாற்றிவிட்டார் ‘தமிழினத் தலைவர்’. ஆட்சி, அதிகாரம் என்பது ஒரே குடும்பத்தின் நலனுக்கு உட்பட்டதாக மாறும்போதுதான் அனைவருக்குமான வாய்ப்பு முடக்கப்படுகிறது.

மன்னராட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் உருவாக்கித்தந்த சமவாய்ப்பு முடக்கப்படுவதுதான் இன்றைய பிரச்சனையின் வேர்.. ஜனநாயகத்தின் இந்த மாண்பு பறிக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்? எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இதுபோன்ற நிலையை ஏற்படுத்தியதால் என்ன ஆனார் என்பதை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த நிலை இங்கும்வர குடும்பம் குடும்பமாக மக்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். வருவார்கள்...

Thursday, February 24, 2011

குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள்!

குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு தமிழகத்திலும், டெல்லி அரசியலிலும் அதிகரித்து வருகிறது. தந்தை பெரியார் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள் என்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்றுப் போராடினர். ரசியப் புரட்சியில் குழந்தை குட்டிகளுடன் அனைவரும் போர்க்களத்தில் குதித்தனர். சீனாவைப் புரட்டிப்போட்ட எழுச்சியில் அனைத்துக் குடும்பங்களும் பங்கேற்றன.

குடும்பம் குடும்பமாக அனைவரும் பங்கேற்காத எந்தப் போராட்டத்தின் வெற்றியையும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. எந்தத் தலைவனும் நினைத்துப் பார்த்ததில்லை. அண்மையில் வெடித்த எகிப்து கிளர்ச்சியிலும்கூட இப்படித்தான் அனைவரும் பங்கேற்றனர்.

இப்படி எல்லாம் குடும்பமாக பங்கேற்க சொல்லிவிட்டு, தம்முடைய குடும்பத்தை மட்டும் எதிர்க்கிறார்களே நியாயமா என முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அங்கலாய்க்கிறார். உண்மைதானே பிறகு எதற்கு இந்த எதிர்ப்பு...

அரசியல், ஊடகத்தொழில், திரைப்படத்தொழில் இப்படி பல்வேறு தொழில்களில் மு.கருணாநிதியின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளனர். எந்தத் தொலைக்காட்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், “சுமங்கலி” நிறுவனத்தின் ஆசி வேண்டும். திரையரங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சன் பிக்சர்ஸ், கிளவுட் நயன்ஸ், ரெட் ஜெயன்ட்ஸ்... போன்ற நிறுவனங்களின் அருளாசி இருந்தால்தான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியும். தி.மு.க. கட்சியில் முன்னேற ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, செல்வி, ராசாத்தியம்மாள் இப்படி யாராவது ஒருவரின் அங்கீகாரம்(?)வேண்டும்.

கிராணைட், ரியல் எஸ்டேட் என எந்தத்தொழிலும் கால் பதிக்க, முன்னேற இவர்களின் ஆசீர்வாதம் அவசியம் இருந்தாகவேண்டும். இந்த நிலைமைதான் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அரசியல், ஊடகம், திரைப்படத்துறை என எந்தத்தொழிலிலும் அனைவரும் ஈடுபடலாம்... திறந்தபோட்டி, சுதந்திர வாய்ப்பு என 1947 ஆகஸ்ட் 15 பெற்றுத்தந்த இந்த உரிமைதான் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் முடக்கப்படுகிறது. அதுவும் ஒரே ஒரு குடும்பத்திற்காக இவை அனைத்தும் முடக்கப்படுகிறது.

தி.மு.க. கழகமே குடும்பம் என அண்ணாத்துரை அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் குடும்பமே கழகம் என அதனை மாற்றிவிட்டார் ‘தமிழினத் தலைவர்’. ஆட்சி, அதிகாரம் என்பது ஒரே குடும்பத்தின் நலனுக்கு உட்பட்டதாக மாறும்போதுதான் அனைவருக்குமான வாய்ப்பு முடக்கப்படுகிறது.

மன்னராட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் உருவாக்கித்தந்த சமவாய்ப்பு முடக்கப்படுவதுதான் இன்றைய பிரச்சனையின் வேர்.. ஜனநாயகத்தின் இந்த மாண்பு பறிக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்? எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இதுபோன்ற நிலையை ஏற்படுத்தியதால் என்ன ஆனார் என்பதை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த நிலை இங்கும்வர குடும்பம் குடும்பமாக மக்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். வருவார்கள்...

Sunday, February 20, 2011

ஸ்பெக்ட்ரமும், ஆரிய, திராவிடப்போரும்(?)

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மேலும் மேலும் ஆதாரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடுவண் புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கைப்பற்றிய ஆதாரங்கள் என ஒன்றிரண்டும்கூட வெளியாகியுள்ளன. இவையே அதிரவைக்கும் படியானதாக உள்ளன. ஆனால் “இப்போது ஒன்றும் செய்ய முடியாது, விசாரணை முடிவுக்கு ஏற்ப தி.மு.க. முடிவெடுக்கும்” என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்.

“தற்போது நடப்பது ஆரிய – திராவிடப் போர், 1972 ஆம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிடப் போர் என்றார். ஆனால் தற்போது அரசியல் ரீதியாக இந்தப் போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது” இவ்வாறு வேலூர் கோட்டைத் திடலில் கருணாநிதி பேசியுள்ளார். (28-10-2010)

உண்மையில் நடப்பது ஆரிய, திராவிடப் போர் தானா?

இந்தியப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க, தலைமையிலான தேசிய முற்போக்குக்கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 ஐக்கிய முற்போக்குக்கூட்டணி-2 என ஆட்சியில் தொடர்ந்து தி.மு.க. இடம்பெற்றுவருகிறது. இங்கு ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார் என்பது தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் என்பது கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றுக்குப் பயன்படும் அலைவரிசை தொழில்நுட்பம். உலக அளவிலான தொழில் வளர்ச்சி, செயற்கைக்கோள், அலைக்கற்றை நுட்பம், கைப்பேசி கருவிகளின் எளிமைப்பாடு போன்றவை புதிதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கொரியா தைவான் சீனா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த / அடைந்துவரும் நாடுகள் இவற்றிலும் முன்னணியில் உள்ளன. பொருளாதார மேதை(?) என்றழைக்கப்பட்ட மன்மோகன்சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கை இவற்றுக்கு எல்லாம் வழியைத் திறந்துவிட்டுள்ளது.

திராவிடர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களும்... நரிக்குறவர், பழங்குடியினர் என எவரும் இந்த தொழில்நுட்பங்களின் விளைவுகளான கைப்பேசியையோ, தொலைக்காட்சி போன்றவற்றையோ பயன்படுத்தலாம். இதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருவதற்கு பொதுத்துறையில் உள்ள பி.எஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு உள்ளது.

இவற்றைச் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக நடுவண் அரசின் அங்கமான கணக்கு தணிக்கைத்துறை சொல்கிறது. பல கோடி கையாடல் நடந்திருப்பதாக மற்றொரு அங்கமான நடுவண் புலனாய்வு அமைப்பு கூறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு(?) வாய் திறந்த பிரதமர் மன்மோகன் “ தன்னுடைய வழிகாட்டுதல்களை அமைச்சராக இருந்த ஆ.ராசா பின்பற்றவில்லை” “கூட்டணி நிர்பந்தம் தன்னால் எதுவும் செய்யமுடியாது” என்று கூறுகிறார்.

உச்சநீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறது. அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள், என அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவை எல்லாம் நடுவண் அரசின் அங்கங்கள் வெளிப்படுத்தியிருப்பவை... இதில் யார் திராவிடர்? யார் ஆரியர்? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க. அமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என அதன் அங்கங்களாக இருக்கும் அமைப்புகளே கூறும்போது நம்மால் யார் திராவிடர்? யார் ஆரியர்? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனை பா.ஜ.கவும், சாமிகளும் வெளியில் எடுத்துச்சொல்லுகிறார்கள். அரசியல் பண்ணக் காத்திருந்த ஜெயலலிதா எடுத்துப்பேசுகிறார். இதனால் அரசியல் ரீதியில் ஆரிய, திராவிடப் போர் நடக்கிறது என்று சொல்லுவது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக கூறுவது போன்றதாகும்.

திராவிடர்களின் உரிமைப் போர், தீண்டாமை கொடுமைக்குள்ளாகி இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், முடக்கப்படும் தமிழ் உணர்வுகள், முகாம்களுக்கும் சிறைப்பட்டுத்தவிக்கும் ஈழத்தமிழனின் அரசியல் உரிமைப் போர்... மாநிலங்களின் உரிமைக்கோரிக்கை, பறிக்கப்படும் ஆற்று நீர் உரிமைகள் என திராவிடத் தமிழனின்(?) இன்னல்கள் ஏராளம். இவற்றுக்கு எல்லாம் குரல் கொடுத்தா திகார் சிறையில் ஆ.ராசா அடைபட்டிருக்கிறார்.

கருணாநிதி குடும்பமும், தி.மு.க.வில் உள்ள ஒரு சிலரும் செல்வத்தில் செழித்து மகிழ நடத்தப்பட்ட இந்த முறைகேடு அம்பலமாகி நிற்கும்போது, கருணாநிதி கூறும் ஆரிய, திராவிடப் போர் என்பதை நம்பி பின்னால் ஓடி வர 50, 60 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்கள் போல் இப்போதும் ஏமாற வேண்டுமா?

(ஸ்பெக்ட்ரம் முறைகேடு... ஊழல்... உண்மை முகம்... அடுத்து...)

Tuesday, October 26, 2010

சமூகப் பிளவும் தாய்மொழி வழியிலான பொதுக்கல்வியும்

கற்றல் என்பது மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் நடக்கும் தொடர் நிகழ்வாகும். மனிதன் பிறந்தது முதல் கல்லறைக்குச் செல்லும் வரை நடக்கும் தொடர் ஓட்டமே கல்வி. இருப்பினும், கல்வியாளர்களின் கருத்துப்படி, மரபு வழியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விழுமியங்கள், நெறிமுறைகள், திறன்கள் அறிவுச் செல்வங்கள் ஆகியவற்றை, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வதையே கல்வி என்கின்றனர்.
இத்தகைய கல்வியை அளிப்பதற்காக இந்திய சமுதாயத்தால் ஏற்பிசைவு அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில், அடிப்படைக் கல்வி அளிக்கும் நிறுவனங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
அரசுப் பள்ளிகள்
மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள்
கேந்திரிய வித்யாலயாக்கள்
மத்திய அரசுப் பள்ளிகள்
இவற்றுக்கிடையே பயிற்று முறை, பயிற்று மொழி போன்ற வேறுபாடுகள் பல இருந்தாலும் அடிப்படையில் இவற்றை வேறுபடுத்துவது பயிற்று மொழியே.
மத்திய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள் இந்தி மொழி வழியிலான விழுமியங்கள், மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தியும், மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள் ஆங்கில மொழி வழியிலான மதிப்பீடுகள், விழுமியங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன. (இதனால் தான் குடிக்கும் தண்ணீருக்குத் திண்டாடும் நம்நாட்டில், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் ரைன் ரைன் கோஅவே படித்துக் கொண்டிருக்கின்றன.)
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் தமிழ்வழிக் கல்வியில் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் ஊடேயே ஒரு ஆங்கில மொழிப் பாடத்தையும் கற்பிக்கிறது.
அனைத்து தனியார் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி என்பதே பெரு வழக்காக கொண்டுள்ளன. சிற்றூர்களைக்கூட இந்த நர்சரிப் பள்ளிகள் விட்டு வைக்கவில்லை. தமிழ்ச் சமூகம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள மிகக் கடினமாக முயன்றுகொண்டிருக்கிறது. கடினமாக என்று சொல்வதற்குக் காரணம், ஆங்கிலம் ஒரு மொழி, அந்த மொழியை கற்றுக்கொள்வது என்ற எல்லையையும் தாண்டி, அம்மொழி வழி பல்வேறு துறை அறிவையும் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் தான். அதுவும் அம்மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளின் வழியாக.
தமிழ்ச் சமூகமே தன்னுடைய தாய்மொழி வழிக் கல்வியை புறக்கணித்துவிட்டு இவ்வாறு செல்ல முயற்சிப்பதற்குக் காரணம் என்ன?
இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு மொழிப் பற்றில்லை, மொழி உணர்வு இல்லை என்று சொல்வது பொருத்தமான பதிலாக இருக்க முடியாது.
எந்தப் பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் யோசிப்பர். அப்படி யோசிக்கும் பொழுது அவர்களுக்குப் பிரகாசமாகத் தெரிகின்ற மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகளையே, அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆங்கில தெரிந்தால் வழக்கறிஞனாகி வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். வழக்குமன்றத்தில் வழக்காடலாம்.
ஆங்கிலம் தெரிந்தால் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளில் அமரலாம்.
ஆங்கிலம் தெரிந்தால் மருத்துவ பட்டப்படிப்பை முடித்து, மருத்துவராகி செல்வச் செழிப்போடு சிறக்கலாம்.
ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால், பன்னாட்டு நிறுவனங்கள் தேடி வந்து வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அழைத்துச் செல்கின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சமூத்தில் மேல்தட்டு- உயர்வாழ்க்கை என்பது ஆங்கிலம் சார்ந்ததாக அமைக்கப் பட்டிருக்கிறது. உடல் உழைப்பைச் சாராத, சமூகத்தின் அதிகாரம் செலுத்தும் இடத்திற்குச் செல்லுவதற்கான கடவுச் சீட்டாக ஆங்கிலம் இருப்பதால், தாய்மொழி வழிக் கல்வியை எதிரானதாகக் கருதுகின்றனர்.
அண்மையில் சென்னைக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டான். (டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் வெளிவந்துள்ளது). தன்னால் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசமுடியவில்லை. படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் அந்த மாணவன்.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களில் 90 விழுக்காட்டி னர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாததால், படிப்பைத் தொடராமல் நிறுத்திவிடுகின்றனர்.
ஒரு மொழியை கற்றுக்கொள்ளுவதற்கும், அந்த மொழி வழி ஒரு துறை அறிவைப் பெறுவதற்கும் அதாவது பயிற்றுமொழியாகவே அம்மொழி இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
நாம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள முயற்சிப்பதைவிட, அம்மொழி வழியாக பல்வேறு துறை அறிவைப் பெற முயற்சித்துப் பரிதவித்து நிற்கிறோம்.
ஆங்கிலம் படித்துவிட்டால் சிறப்பான எதிர்காலத்திற்கான விசா கிடைத்துவிட்டதாக இந்த சமூக மனம் கருத வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் மொழிக் கொள்கைகள், பல்வேறு வல்லுநர்களின் பரிந்துரைகள் எல்லாம் அந்த விசாவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இதனால் உழவுத் தொழில் உள்பட இந்த சமூகத்தின் வாழ்வோடு பிணைந்துள்ளவை அனைத்தும் புறக்கணிப்பட்டு, புறந்தள்ளப்பட்டு வருகின்றன. அவற்றையும், அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களையும் கீழானவர்களாகக் கருதும் மனப்பான்மையும் வளர்ந்து நிற்கிறது.
ஆங்கிலம் தெரிந்தவன் அரசோடும் அதிகாரத்தோடும் எளிதாகத் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இத்தகைய கொள்கைகளால், செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகம் பிளவுண்டு நிற்கிறது. இணக்கம் காண முடியாத முரண்பாடு இந்தச் சமூகத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து நிற்கிறது.
இதற்கு நேர்மாறாக, தாய்மொழியில் கற்பவன் நாட்டுப்புறத்தானாக, விவரம் தெரியாதவனாக, முன்னேறுவதற்கு வழியற்றவனாக கருதும் நிலை இந்த சமூகத்தில் உள்ளது. சமூகத்தின் கருதுநிலை மட்டுமல்ல, எதார்த்தமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.
இதற்கு மிக எளிமையான எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்க்கலாம். சென்னை போன்ற நகரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளில் பயணிப்பதற்குக் கூட ஆங்கிலம் தெரியவேண்டிய கட்டாயம் உள்ளது. 18K, 18A, 18G, 18D இந்த நான்கு வழித்தடமும் வெவ்வேறு முனைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளாகும். பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல 18K, பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்ல 18A, பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லுவதற்கு 18G. இந்த ஆங்கில எழுத்துகள் தெரியாத, தமிழ் மட்டும் தெரிந்தவன் இந்தப் பேருந்துகளில் பயணிப்பது எவ்வளவு கடினம் என்று எண்ணிப் பாருங்கள். பயணம் செய்வதற்கே இந்தச் சிக்கல் என்றால், உயர் கல்வி முதல் அரசு அலுவலகங்கள் வரைச் செல்வதற்கு எத்தனை தடைகள் இருக்கின்றன.
இதனால்தான் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறி நிற்பதுபோல், தங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் தடுமாறிவிடக் கூடாது என்ற அச்சத்தால், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன் பெற்றோர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இப்படி மொழியின் பேரால், இந்தச் சமூகம் பிளபட்டு நிற்பதற்கு முடிவு கட்டாமல், தமிழர்களால் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாது.
இந்த முரண்பாட்டைக் களைவதற்கான முதற்படி... தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி.
அரசு, அதிகார நிறுவனங்கள் உள்பட அனைத்து வேலைவாய்ப்புகளும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி பெற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆங்கிலம் தெரியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிப்பதில் இருந்து தமிழ்ச் சமூகம் விடுபடமுடியும். மாணவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக, வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கல்வியைக் கற்றவர்களாக தலைநிமிர்ந்து செல்ல முடியும். புதியது புனையும் ஆற்றலைப் பெற முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், சமூகப் பிளவுகளுக்கும் முரண்பாட்டுக்கும் உரிய அடிப்படையை களையக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியே.
இன்றைக்கு கல்வி வியாபாரமாக்கப்பட்டு, அதற்குரிய இலக்கணத்தையே இழந்து நிற்கிறது. ஆங்கில வழியில் பத்து ஆண்டுகள் படித்து முடித்தவனால், ஆங்கிலத்தில் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் தடுமாறும் தத்துப்பிள்ளகளாக அவர்கள் காட்சியளிக் கின்றனர். புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் பெருகி நிற்கும் நர்சரி பள்ளிக்கூடங்கள் இதைத் தான் சாதித்துள்ளன.
பள்ளிக் கல்வி நல்ல வியாபாரப் பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக ஏற்றம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்து வருகிறது.
இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி மட்டுமே. கல்வியை வணிகமாக்கி, தங்களைப் வளப்படுத்திக்கொள்வதையும் இக்கல்வி ஒழித்திடும்.
மக்களை, எதிர்காலத் தலைமுறையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியைக் கொண்டுவருவதற்காக முயற்சிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவையும்கூட.

(லயோலா கல்லூரி நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)